Monday, October 25, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -3 !!!

மாஞ்சோலை பாகம் 1 & பாகம் 2 படிக்க இங்கே கிளிக்கவும்!

கடைசியாக குதிரை வெட்டிக்கு வந்து சேர்ந்தோம். அடிக்கின்ற குளிரில் கை கால்களெல்லாம் விறைத்தது! அங்கே வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய தங்கும் இடம் ஒன்று உள்ளது, ஆனால் நாங்கள் உடனே திரும்ப வேண்டியதிருந்ததால் அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்தோம்.காட்டு பன்றிகள் அந்த நேரத்திலேயே மிக சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தது... சில பெரிய பன்றிகளின் பற்கள் நன்றாக வெளியே வந்து கொம்பு போல காட்சியளித்தது பார்க்க மிக பயங்கரமாக இருந்தது.

புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் கூட இவைகளிடம் நெருங்க பயப்படும், அந்த அளவுக்கு பலம் வாய்ந்தது என்றார் வனத்துறை நண்பர் ஒருவர்.அப்படியே சிறிது தூரம் நடந்து ஒரு வாட்ச் டவர் மேலே ஏறி பார்த்தால் ஒரு அருமையான வியூ! கீழே உள்ள காரையார் அணையும் சேர்வலார் அணையும் மிக அழகாக தெரிந்தது!




எனக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் என்னவென்றால் இந்த இயற்கை கொஞ்சும் அழகும்,  இந்த வியூ பாயின்ட்டுகளும் மற்ற சுற்றுலா தளங்களை விட அழகானவை. இததனைக்கும் இங்கு பெரிய பராமரிப்பு எதுவும் இல்லை. மிகவும் வியந்து நண்பரிடம் கேட்டேன் "எப்படின்னா இந்த மாதிரி கொஞ்சம் கூட சீர் குலையாத அழகு?". அதற்கும் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்தார்... எனக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது... என்னடா இவரு! என்ன கேட்டாலும் சும்மா மணிரத்னம் படத்துல பாக்கிற மாதிரி சிரிக்க மட்டும் செய்றாருனு!

சரி! கீழே இறங்கலாம், போகும் போது கோதையார் அணையையும் இன்னொரு வியூ பாயிண்டையும் பாத்துட்டு போகலாம்னு முடிவு பண்ணியாச்சு... கீழே இறங்கவே மனசில்லாமல் எங்களுடன் சேர்ந்து தவேராவும் ஸ்டார்ட் செய்ய கதறியது! அதன் தொண்டையும் கமறியது!! மீண்டும் வரும் வழியில் கண்ட சில காட்சிகளை பசியில் இருப்பவனுக்கு பாய் கடை பிரியாணி கிடைத்தால் அள்ளி விழுங்குவானே அது போல்   கேமரா அந்த அழகை அசுர வேகத்தில் விழுங்கியது... அதில் சில கீழே!






தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் வரிசையாக அழகாக காட்சியளித்தது... எல்லா வீட்டு கூரையின் மேலும் மணல் மூடைகள் வரிசையாக அடுக்கப் பட்டிருந்தது! இல்லையென்றால் சில நேரம் அடிக்கிற காற்றில் ஆகாயம் கூரையாகி  விடுமாம் . இன்னொரு விந்தையான விஷயம் நான் கண்டது, சில வீடுகளில் குளிர் சாதன பெட்டி வைத்திருந்தார்கள், எதற்கு என்று புரிய வில்லை! அந்த ஊரே ப்ரீசரில்  வைத்தது போல்தான்  இருந்தது.... ;-)

சில பல வளைவுகளைக் கடந்து "மருத அழகரோ"னு நம்ம ரம்பா சுந்தர புருஷன் படத்திலே துள்ளி குதிச்சு ஆடுற அந்த இடத்திற்கு வந்தது!சரியா சொல்லனும்னா அந்த படத்திற்கு அப்புறம் நம்ம "பேராண்மை" படத்திலே சில காட்சிகளுக்கு தான் படம் எடுக்க அனுமதி கிடைத்தது! அது கூட வனத்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் என்பதால்! அந்த இடத்தில் ஒரு சின்ன அறை! அதிலே ரெண்டு மின்வாரிய அலுவலர்கள் மட்டும் இருந்தாங்க... அங்கே ஒரு சின்ன ட்ராக் இருந்தது, அதில் ஒரு வீன்ச் ஒண்ணு அவர்களும் வனத்துறை அதிகாரிகளும் மேலேயும் கீழேயும் போகும் வசதிக்காக இருந்தது. இதில் என்ன கொடுமை என்றால், அதிலே ஒருத்தர் கிட்டத்  தட்ட ரெண்டு வார காலம் தனியாக இருந்தாராம்! எந்த நேரத்திலும் காட்டு மிருகங்கள் வர வாய்ப்புள்ள ஒரு இடத்த்தில் தனியாக, நினைக்கும் போதே தண்டு வடத்தில் சில்லென்றது! நாங்கள் பார்த்து வியந்து, சிலாகித்த அந்த இடங்கள் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு பங்கானதால் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை போல! என்ன ஒரே ஒரு ஆறுதல் என்றால் அந்த இடத்தில் செல் போன் சிக்னல் இருந்தது!

அந்த அருமையான இடங்கள் உங்கள் பார்வைக்கு!!!





எல்லா அழகையும் கண்கொண்டு பருகி விட்டு கீழே இறங்க ஆயத்தமானோம்! வண்டி பொறுமையாக இறங்கிக் கொண்டிருந்தது, அனைவரும் சோர்வில் சற்று கண்ணயர தொடங்கினோம், ஒரு வளைவில் பயங்கர புழுதி மண்டலமாய் காட்சியளித்தது, முன்னே இருப்பது ஒன்று கூட தெரியாததால் டிரைவர் வண்டியை அப்படியே நிறுத்தினார்... திடீரென்று ஒரு சத்தம்.... அனைவரும் அரண்டு போனோம்! சற்று கண்களை கூர்மையாக்கி கவனித்தால் ஒரு ஐந்தாறு காட்டெருமைகள் ஒன்றோடொன்று   விளையாடிக் கொண்டிருந்தது. ஆஹா! போஹோட்டோ எடுக்கலாம்னு நெனைக்கும் போதே டிரைவர் ஹெட் லைட்டை அணைத்தார்... என்னன்னே? ஒரு போட்டோ எடுக்கலாம்னே என்றவனை பார்த்து, "தம்பி! வெளிச்சத்தை பார்த்து இங்கே வந்துதுன்னு வையி, வண்டியோட நம்மளை சட்டினி ஆக்கிரும். எல்லாரும் அமைதியாய் இருங்க " என்றார்... ஒரு 5 -6 நிமிடம் கழித்து எங்கள் பக்கத்தில் கடந்தது சென்றது... அவ்வளவு பக்கத்தில் பார்த்த பின்தான் டிரைவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது!

மலையை விட்டு இறங்கி மணிமுத்தாறு சோதனை சாவடியை கடந்ததும் வெப்பம் அதிகரித்தது தெரிந்தது. அப்போ அந்த நண்பர் சொன்னார்

" சிவா! நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் உங்களுக்கு பதில் கிடைத்ததா"
"இல்லைன்னே"
"இந்த இடமும் அழகும் இன்னும் மாசு படாம இருக்குதுன்னா, அதுக்கு காரணம் இன்னும் இதை ஒரு சுற்றுலாத் தலமாக அறிவிக்காததும், பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடாததும் தான் காரணம்! இயற்கையோட படைப்புல எல்லா இடமும் அழகுதான்... ஆனா நம்ம மக்கள் மாசு படுத்திட்டாங்க எல்லாத்தையும்.... விடுங்க! இந்த மாஞ்சோலையாவது அழகா இருக்கட்டும்"

நெத்திப் பொட்டில் அடித்து போன்ற வார்த்தைகள் அவை! அந்த உண்மை மிகவும் சுட்டதால் நான் மௌனியானேன்... எங்க அப்பா அடிக்கடி சொல்வார் " காட்டுக்குள்ளே யானை, சிங்கம், புலி இன்னும் எவ்வளவோ மிருகங்கள் நடக்கும் ஆனா மனுஷ காலடி அடிக்கடி படுற இடத்திலே பாத்தா புல்லு கூட முளைக்காது"னு... ரொம்ப சரி!!!

என்னோடு சேர்ந்து பயணித்த உங்கள் எல்லாருக்கும் என்னோட நன்றிகள்!

நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

19 comments:

  1. உங்க கேமராக்கு நல்ல தீனி எங்களுக்கு நல்ல குளுமை..
    படங்கள் செம சூப்பர் சிவா!

    //காட்டெருமைகள்//
    செம எக்ஸ்பீரியன்ஸ் தான்.. ;)

    //ரொம்ப சரி!!!//

    நீங்களே சொல்லிட்டீங்க..

    ReplyDelete
  2. செம ஸ்பீட் பாலா! நன்றி!

    ReplyDelete
  3. படங்கள் அனைத்டும் குளுமை.... நானும் இப்படி ஒரு அனுபவத்திற்காக பாத்து இருக்கிறேன்

    ReplyDelete
  4. நல்ல பயணம் சிவா.. இந்தமாதிரி இடங்களுக்குப் போனால் திரும்பறதுக்கு மனசே வராது..

    அண்மையில நானும் வால்பாறையில ஒரு கிராமத்திற்கு கல்யாணத்திற்குப் போயிருந்தேன்.. ரொம்ப நல்ல அனுபவமது..

    போட்டோஸ் எல்லாமே நல்லாயிருந்தது.. நல்ல பதிவு..

    ReplyDelete
  5. நன்றி அருண் பிரசாத்!

    கண்டிப்பாக பாபு! நானும் உங்களின் அந்த பதிவை படித்திருக்கிறேன்... நன்றாக இருந்தது!

    ReplyDelete
  6. //இயற்கையோட படைப்புல எல்லா இடமும் அழகுதான்... ஆனா நம்ம மக்கள் மாசு படுத்திட்டாங்க எல்லாத்தையும்.// உண்மை நண்பரே! இயற்கை மனிதர்களால் அழிந்து கொண்டிருக்கிறது!
    உங்கள் பயண அனுபவம் மிக அருமையாக இருந்தது! அனைத்து படங்களும் அழகு! நன்றி!

    ReplyDelete
  7. படங்கள் எல்லாம் பட்டயக் கிளப்புதுங்க ..!!

    ReplyDelete
  8. நன்றி செல்வக்குமார்!

    ReplyDelete
  9. திருப்தியான படைப்பு! அடுத்து எங்கொ?

    ReplyDelete
  10. நன்றி சித்ரா!

    நன்றி ரம்மி! தெரியலை எங்கேன்னு! பார்க்கலாம்!!!

    ReplyDelete
  11. //எங்க அப்பா அடிக்கடி சொல்வார் " காட்டுக்குள்ளே யானை, சிங்கம், புலி இன்னும் எவ்வளவோ மிருகங்கள் நடக்கும் ஆனா மனுஷ காலடி அடிக்கடி படுற இடத்திலே பாத்தா புல்லு கூட முளைக்காது"-

    எவ்வளவு அழகாய் சொல்லியிருக்கிறார் உங்கள் தந்தை? உங்கள் பயண அனுபவங்களும் படங்களும் அருமை!

    ReplyDelete
  12. கடந்த வருடம் நாங்கள் செல்ல இருந்தோம் எதிர்பாரத விதமாக போக முடியவில்லை ஆனால் இந்த தடவை கண்டிப்பாக மிஸ் பண்ண மாட்டேன் இந்த மஞ்சோலை இயற்கையை

    ReplyDelete
  13. உங்களுடன் பயணித்த அனுபவம் வார்த்தைகளை கடந்தது.இந்த இடத்திற்கு பேருந்து வசதி எந்த இடத்திலிருந்து உள்ளது?

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!