Wednesday, August 11, 2010

என் எண்ணத்தை எழுதி என்னத்த! (தலைப்பு வெக்கவே தனியா யோசிக்கணும் போல)


ஏதோ எங்க வீட்டுகாரரும் சந்தைக்கு போனாருன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சாச்சு. என்ன எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு ஏற்கனவே சென்னை தண்ணியிலே கொத்து கொத்தா கொட்டுற முடியை நானும் கூட கொஞ்சம் பிக்க ஆரம்பிச்சிட்டேன். நாட்டுலே எவ்வளவோ விஷயம் இருக்குது ஆனா நம்ம கிட்ட இருக்கா... நம்ம கௌண்டமணி சொல்ற மாதிரி டே நாயே ஊட்டிலே எஸ்டேட் இருக்கு உனக்கு இருக்கா அப்படின்னு எனக்குள்ளே ஒரு கேள்வி. சரி விடு.... கல்லூரி பருவத்திலே கிறுக்குனது ஒண்ணு எடுத்து போட்டுரலாம்னு இதோ போட்டாச்சு.


பரிணாமங்கள்

அன்று ஒரு நாள் உன் முன்...
உள்ளத்தில் ஓராயிரம் வார்த்தைகள் இருந்தும்
உதட்டளவில் ஊமையாய்; திக்கி திணறி , உன்பால் உள்ள காதலை
உள்ளம் திறந்து உணர்த்திய போது;
புன்சிரிப்பால் எனை புதியவனாய் மாற்றிய போது
கள்ளமில்லா காதலியாய்.......


சாதி சாக்கடைகளும் சமயக் கோட்பாடுகளும் - நம்
காதலை நசுக்க நினைக்கையில், என்
கண் அசைவிற்கு கட்டுப்பட்டு
நண்பர்கள் மட்டுமே சொந்தமாய், நான் ஒருவனே உடமையாய்
என் தாலியை கழுத்தில் வாங்கிய கணத்தில்
மனங்கவர் மனைவியாய்......


சிக்கல்கள் எனும் சிலந்தி வலையில் நான்
சிக்கும் பொழுது என் சிந்தைகளை சிதற விடாமல்
வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் நேரத்தில்
அறநெறி ஊட்டும் ஆசானாய்.....

தோல்விகள் சூழ நான் துவண்டு விழுகையில்
தோள்கொடுக்கும் நேரத்தில்
நல்ல தந்தையாய்.....

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், நான்
உன்மத்தர்களால் உள்ளம் இடிந்தாலும்
உயிருக்கு உயிராய் வாழ்கையில்
உற்ற நண்பனாய்.....

சோர்ந்து நான் வரும் வேளையில்
புன்சிரிப்போடு எனை எதிர் கொண்டு
ஆதரவாய் அரவணைத்து அன்போடு
அறுசுவை உணவு பரிமாறி, சற்றே நான்
கண்ணயர உன் மடியையே பஞ்சனையாக்கும் பொழுது
அன்புள்ள அன்னையாய்.....

அன்பே! உனக்குள்தான் எத்தனை பரிணாமங்கள்!!!






2 comments:

  1. வலையுலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..
    தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!